Saturday 21 April 2018 | By: Menaga Sathia

பில்டர் காபி போடுவது எப்படி ?? /How To Make Filter Coffee |South Indian Filter Kaapi recipe

 தென் இந்தியாவில் பில்டர் காபியை பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது.அதுவும் கும்பகோணம் பில்டர் காபி மிக பிரபலம்.
சில்வர் / பித்தளை டபாரா செட் உடன் இதனை பரிமாறுவது வழக்கம்.ஒட்டல்களில் சென்றால் பில்டர் காபியை குடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இதனை சரியான விகிதத்தில் செய்தால் தான் காபி சுவையாக இருக்கும்.கறந்த பாலில் தண்ணீர் விடாமல் காய்ச்சி டிகாஷனை கலந்து சுவைப்பதே தனி சுவை.

இங்கு பிரபலமான நரசுஸ் காபித்தூளை பயன்படுத்தி இருக்கேன்.நம்ம ஊரு கறந்தபாலில் செய்த சுவை வரவில்லை .படத்தில் நான் 2 வித பில்டர் செட்டினை காட்டியுள்ளேன்.வலப்பக்கம் இருப்பது பழைய மாடல்.இடப்பக்கம் இருப்பது புதுமாடல்..மறக்காம பின் குறிப்பு பகுதியை படிங்க...

கடையில் எப்பவும் காபிதூளை தான் விற்பாங்க,நாம தான் சிக்கரியை தனியாக கேட்டு வாங்கனும். 200 கிராம் காபிதூளுக்கு 50 கிராம் சிக்கரி சரியான அளவு.சிக்கரி சேர்ப்பது காபிக்கு நிறத்தினை கொடுக்கும்.எப்போழுதும் இந்த அளவிலயே வாங்கி கலந்து கொண்டால் காபித்தூள் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

பில்டர் செட் நான்கு பகுதியை கொண்டிருக்கும்.அடியில் இருப்பது டிகாஷன் சேகரிக்கும் பாத்திரம்.மேல் பாத்திரத்தின் அடியில் டிகாஷன் இறங்க சிறு புள்ளிகளை கொண்டிருக்கும்.அதன் உள்ளே காபித்தூளை  போட்ட பின் ஒரு கம்பி போல ஒன்று இருக்கும்.

அதனை காபித்தூளை போட்டபின் அதன் மேலை வைத்து சுடுநீரை ஊற்றி மேல் மூடியை ஊற்றினால் டிகாஷன் ரெடி !!

2 நபர்கள் குடிக்கும் அளவு இது...

தே.பொருட்கள்

கொழுப்புள்ள பால் -1 1/2 கப்
காபிதூள் -2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -2 டீஸ்பூன்
உப்பு -1 சிட்டிகை


செய்முறை :

*கீழே இருக்கும் படத்தில் இருப்பது 2 வகை பில்டர்கள்களும்,காபிதூளும்...
^
 *பாத்திரத்தில் தண்ணியை நன்கு கொதிக்கவைக்கவும்.பில்டர் மேல் பாத்திரத்தில் அடியில் உப்பு சேர்த்த பின் காபிதூளை சேர்க்கவும்.
 *அதன் மேல் நீண்ட கம்பிபோல இருப்பதை வைத்து அதனை அப்படியே அழுத்தி பிடித்து கொதிக்கும் தண்ணியை  ஊற்றி மூடி போட்டு மூடினால் 3 நிமிடத்தில் டிகாஷன் ரெடி.
 *தண்ணி கொதிக்கும் போது இன்னொரு அடுப்பில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.டிகாஷன்+சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சிய பாலினை வடிகட்டி டிகாஷனில் சேர்க்கவும்.
*இப்போழுது நன்கு நுரை பொங்க ஆற்றி டபாரா செட்டில்  ஊற்றி பருக வேண்டியது தான்.

பி.கு

*எப்போழுதும் பாலும்,டிகாஷனும் சூடாக இருக்க வேண்டும்.டிகாஷன் அவரவர் விருப்பத்துக்கு சேர்க்கவும்.

*மறுபடியும் அதே டிகாஷனில் நீரை கொதிக்க வைத்து ஊற்றினால் 2வது டிகாஷன் ரெடி !!

*முதல் டிகாஷன் திக்காகவும் சுவையாகவும் இருக்கும்.2வது டிகாஷன் வெளிர் நிறத்தில் இருக்கும்.

*பில்டர் எப்போழுதும் காய்ந்து இருக்கவேண்டும்,ஈரமிருந்தால் டிகாஷன் இறங்காது.

*காபிதூள் போடும் பாத்திரம் சிலநேரம்  அடைத்துக்கொள்ளும் அப்போழுது ஊசியால் குத்தினால் டிகாஷன் சீக்கிரம் இறங்கும்.

*கொழுப்புள்ள பாலையே பயன்படுத்தவும்.
01 09 10