Monday 28 March 2016 | By: Menaga Sathia

ரசவடை / Rasa Vadai | Nanjil Spl Recipe


ரசவடை ‍நாஞ்சில் நாட்டு சமையலில் மிக பிரபலமான ஒன்று.வடை செய்வதற்கு பட்டாணி பருப்பு தான் முக்கியம்.அது கிடைக்காத பட்சத்தில் கடலைப்பருப்பில் வடையை செய்யலாம்.

பட்டாணிபருப்பு ,இதை பற்றி முக்கியம் நான் சொல்லியே ஆகனும்,இதனை கடைகளில் பார்த்தாலும் ஏதோ தேவையில்லாத பருப்பு போல இதனை வாங்கவே மாட்டேன்.கடலைபருப்பு போல இல்லையே இது எதுக்குனு வாங்கமாட்டேன்.ஆனால் சாந்தி அக்காவின் பதிவை பார்த்ததும் அடக்கடவுளே !! இத்தனை நாளா இதனையா நாம வாங்காமல் விட்டோம்னு வருத்தம்...

ஆமாங்க,நான் தேவையில்லாத பருப்புனு எதை நினைத்தேனோ அதுதான் பட்டாணிபருப்பாம்,அப்புறமென்ன வாங்கி வந்து ரசவடையும் செய்து சாப்டாச்சு.கடலைபருப்பை விட பட்டாணிபருப்பின் விலை இங்க குறைவு தான்.வடையின் சுவையிலும் வித்தியாசம் தெரிகிறது.இனி கடலைபருப்புக்கு பைபை சொல்லவேண்டியது தான்.பட்டாணி பருப்பினை ஆங்கிலத்தில் Yellow Split Peas ,ப்ரெஞ்சில் POIS CASSES JAUNEஅழைக்கபடுகிறது.

இப்போ குறிப்புக்கு வருவோம்,ரசவடை செய்வதற்கு வடையை உருண்டையாகதான் போடுவாங்க.உளுந்து வடையில் செய்த ரசவடைலாம் ரசவடையே இல்லைன்னு நாஞ்சில் நாடு சாந்திஅக்கா சொல்லிட்டாங்க.அதனால் ரசவடை செய்தால் பருப்பு வடையினையே சேர்க்கவும்.அவங்க ரசவடை குறிப்பினை அவ்வளவு சுவையோடு எழுதியிருந்ததை படித்ததும் ஆர்வமாகி செய்தாச்சு.

அதேபோல் ரச செய்முறையும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.

Recipe Source : Here 

வடை செய்ய‌

பட்டாணி பருப்பு- 1 கப்
காய்ந்த மிளகாய்- 6
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
உப்பு + எண்ணெய் -தேவைக்கு

செய்முறை 
*பருப்பினை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடித்தபின் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

*சாதரணமாக வடைக்கு அரைப்பதுபோல் கொரகொரப்பாக அரைக்காமல் ரவை பதத்தில் அரைத்தெடுக்கவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மேற்கூறிய பொருட்களை கலந்து சிறு உருண்டையாக பிடித்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

ரசம் செய்ய‌

இந்த ரசம் மசாலா செய்வதற்கு,அரைதெடுத்த மொத்த மசாலாவும் நெல்லிக்காயளவு மட்டுமே இருக்க வேண்டும்.

தே.பொருட்கள்
தக்காளி ‍- 2
புளிகரைசல்- 2 கப்
நீர்- 1 கப்
உப்பு- தேவைக்கு
பெருங்காயப்பொடி- 1/4 டீஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
எண்ணெய்- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
நறுக்கிய கொத்தமல்லி -தேவைக்கு

மசாலா செய்ய‌
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
தனியா- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
பூண்டுப்பல்- 10


செய்முறை
*மிளகு+சீரகம்+தனியா+காய்ந்த மிளகாய்+மஞ்சள்தூள் இவற்றை சற்றே கரகரப்பாக பொடித்த பின் கறிவேப்பிலை மற்றும் பூண்டினை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்ததும் அரைத்த மசாலா மற்றும் பெரிய துண்டுகாளாகிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

*தக்காளியின் மேல்தோல் மட்டும் சற்று பிரிந்தாற்போல் வந்ததும் புளிகரைசல்+உப்பு+நீர் சேர்க்கவும்.

*ரசம் நுரைத்து வரும் போது பெருங்காப்பொடி+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

ரசவடை செய்ய‌

*ரசத்தினை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் ஆறிய வடைகளை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

*பின் அப்படியே 2மணிநேரம் ஊறவைத்தால் வடைகள் 2மடங்காக உப்பியிருக்கும்.

*லேசாக சூடுபடுத்தி ரசவடையினை சூடாக பரிமாறவும்.
Saturday 19 March 2016 | By: Menaga Sathia

வெண்பொங்கல்,மைசூர் போண்டா,சட்னி& அவசர சாம்பார் / South Indian Breakfast Menu

நான் எப்போழுதும் காலை உணவாக ஆம்லெட்,ப்ரெஞ் டோஸ்ட் தான் செய்வேன்,ஈஸியானதும் கூட.இன்றைக்கு சீக்கிரமாகவே எழுந்துவிட்டதால் காலை உணவாக பொங்கல்,போண்டா செய்தாச்சு..

வெண்பொங்கல்
மைசூர் போண்டா
தேங்காய் சட்னி   (இதில் மாங்காய் இஞ்சி சேர்க்காமல் அரைத்துள்ளேன்)
அவசர சாம்பார்

*இந்த அவசர சாம்பார் பருப்பு,தேங்காய் இல்லாமல் செய்தது,அதன் குறிப்பு வேறொரு நாளில்..

*எழுந்ததும் போண்டாவிற்காக உளுத்தம்பருப்பினை ஊறப்போடவும்.1 மணிநேரம் ஊறினால் போதும்.

*அதற்குள் குக்கரில் அரிசி பருப்பினை வேகவைத்தால் பொங்கல் ரெடி,அதன் பின் பொங்கலுக்கு தாளிக்கவும்.

*தேங்காயை எப்போழுதும் துருவி ப்ரீசரில் வைத்துவிடுதால்,மைக்ரோவேவில் தேவைக்கு தேங்காய் டிப்ராஸ்ட் செய்து சட்னி ரெடி செய்யவும்.

*பின் இன்னொரு குக்கரில் சாம்பார் செய்தால் அதுவும் ரெடி.

*கடைசியாக பருப்பினை அரைத்து போண்டா செய்து,காபியுடன் டிபனை பரிமாறவேண்டியது தான்.

*பருப்பு ஊறவைக்கும் நேரம் தவிர 3/4 மணிநேரத்தில் அனைத்தையும் செய்துவிடலாம்.
Wednesday 16 March 2016 | By: Menaga Sathia

சீரக சாதம்,ஆலு பாலக்,கோவைக்காய் ராய்தா,ப்ளெயின் குல்சா,மசாலா மோர் / North Indian Veg Lunch menu

எப்போழுதும் தெந்நிந்திய மெனு சாப்பிட்டு போரடிவிட்டதால்,ஒரு மாறுதலுக்காக வட இந்திய லஞ்ச் செய்தேன்.என் பொண்ணு பாலக் பன்னீர் செய்ய சொன்னாங்க,ஆனால் பனீர் கைவசம் இல்லாததால் அதற்கு பதில் உருளை போட்டு செய்தாச்சு.

சீரக சாதம் (பால் சேர்க்காமல்,சீரகம் மட்டும் தாளித்து சேர்க்கவும் )
ஆலு பாலக் ( பனீர் பதில் உருளை சேர்க்கவும்)
மசாலா மோர்
கோவக்காய் ராய்தா
ப்ளெயின் குல்சா (ஸ்டப்பிங் சேர்க்காமல் செய்யவும்)

*அனைத்தும் ரெடியாக வைத்திருந்தால் சமையல் 1 மணிநேரம் முடித்துவிடலாம்.

*குல்சா செய்ய மாவினை பிசைந்து ஊறவைத்து விடவும்.

*மசாலா மோர் செய்து ப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

*அரிசியை 15 நிமிடம் ஊறவைக்கவும்,உருளையை வேகவைக்கவும்.ஆலு பாலக் செய்ய வெங்காயம்+தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

*சாலட்டிற்கு வெள்ளரிக்காய்,தக்காளியை வட்டமாக நறுக்கவும்.ராய்தாவிற்கு கோவைக்காய் துருவி வைத்தால் ராய்தா ரெடி.

*பாலக் கீரையை வதக்கி அரைத்தால் ஆலு பாலக் ரெடி செய்து விடலாம்.

*கடைசியாக சாதமும்,குல்சாவும் செய்தால் லஞ்ச் ரெடி...

Monday 14 March 2016 | By: Menaga Sathia

மாங்காய் இஞ்சி குழம்பு,கோங்கூரா பச்சடி,அவியல்&கொட்டு ரசம் / South Indian Veg Lunch Menu




இன்றைய சமையல்

மாங்காய் இஞ்சி குழம்பு
கோங்கூரா பச்சடி
அவியல்
கொட்டு ரசம்

*இந்த மொத்த சமையலும் 1 மணிநேரத்தில் முடித்துவிடலாம்.இதில் கோங்கூரா பச்சடி மட்டும் முதல் நாளே செய்துவிட்டேன்.

*புளியை குழம்பிற்கும்,ரசத்திற்கும் சேர்த்து ஊறவைத்து ,கரைத்து குழம்பு மற்றும் ரசத்திற்கு தனியாக வைக்கவும்.

*குழம்பிற்கு இஞ்சியை நறுக்கி,எண்ணெயில் வறுத்து அரைத்து வைக்கவும்,அவியலுக்கு தேங்காய் மசாலா தனியாக அரைத்துவைக்கவும்.

*அவியலுக்கு காய்களும்,குழம்பிற்கு வெங்காயம்,பூண்டும் நறுக்கி வைத்தால்,அவியல்,குழம்பு செய்துவிடலாம்.

*கடைசியாக ரசம்,சாதம் வைத்தால் உண்வு ரெடி!!
Wednesday 9 March 2016 | By: Menaga Sathia

பாதாம் புதினா சிக்கன் /Badham Pudhina Chicken (Almond Mint Chicken ) | Chicken Recipes


நாண் ,நெய் சாதம்,புலாவ் ,சப்பாத்தி இவற்றிற்கு நன்றாக இருக்கும்...

Recipe Source : Here

தே.பொருட்கள்

சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 5
பாதாம் -20
தயிர் -1/2 கப்
நெய் - 5 டேபிள்ஸ்பூன்
கெட்டி தேங்காய்ப் பால் -  1 கப்
புதினா - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு

அரைக்க

இஞ்சி - சிறு துண்டு
பூண்டுப்பல் - 10
ஏலக்காய் - 3
பட்டை - சிறிது
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் தயிரில் ஊறவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.பாதாமை வெந்நீரில் ஊறவைத்து,தோலுரித்து விழுதாக அரைக்கவும்.

*ஊறவைத்த சிக்கனை குக்கரில் 3 விசில் வரை வேகவைக்கவும்.

*கடாயில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்+அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் தேங்காய்ப்பால் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

*பின் வேகவைத்த சிக்கன்+பாதாம் விழுது+உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

*5 நிமிடம் கழித்து புதினாவை தூவி இறக்கவும்.
Tuesday 1 March 2016 | By: Menaga Sathia

மங்களூர் போண்டா / Mangalore Bonda | Goli Baje | Snacks Recipe

print this page PRINT IT 
மாலை நேரத்தில் எளிதாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் இது.

மைசூர் போண்டா உளுத்தபருப்பிலும்,மங்களூர் போண்டா மைதாமாவிலும் செய்யபடுகிறது.ஆரம்பத்தில் எனக்கு இந்த போண்டாவின் பெயர் குழப்பம் அதிகமாகவே இருந்தது.


தே.பொருட்கள்
மைதா -1/2 கப்
கடலைமாவு- 1/8 கப்
அரிசிமாவு- 1 டீஸ்பூன்
புளித்த தயிர்- 1/2 கப்
உப்பு -தேவைக்கு
பேக்கிங் சோடா- 1 சிட்டிகை
கறிவேப்பிலை- 1 கொத்து பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய்- 1 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை- 2 டீஸ்பூன்
பொருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணெய்- பொரிக்க‌

செய்முறை
*பாத்திரத்தில் மைதா+அரிசிமாவு+கடலைமாவு+உப்பு மற்றும் புளித்த தயிர் சேர்த்து மாவினை கலந்து குறைந்தது 3 மணிநேரம் ஊறவைக்கவும்.


*பின் பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

*சூடான எண்ணெயில் போண்டாகளாக பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பி.கு
*மங்களூர் போண்டா செய்வதற்கு குறைந்தது மாவினை 3 மணிநேரங்கள் ஊறவைக்க வேண்டும்.அப்போழுதுதான் போண்டா மிருதுவாக இருக்கும்.

*மாவினை பதமாக கரைக்கவும்,கெட்டியாக மாவு இருந்தால் போண்டா கடினமாகவும்,மாவு நீர்க்க இருந்தால் போண்டா எண்ணெய் குடித்தாற் போலவும் இருக்கும்.

*பேக்கிங் சோடாவை எப்போழுதும் போண்டா சுடும் போது மட்டுமே சேர்க்கவும் இல்லையெனில் மாவு நீர்த்துவிடும்.
01 09 10